Sunday, 28 August 2011

தோழி செங்கொடி...

தோழி செங்கொடி...

நம் சகோதரர்களின்
உயிரை கயிறு
உறிஞ்சக் கூடாது
என்பதற்காக
உன் உயிரை தீ
உறிஞ்சக் கொடுப்பதா?

மரணத்தை
தடுப்பதற்கு, மரணம்தான்
வழியா?

நம் போராட்டம்தான்
நெருப்பை உமிழ வேண்டும்!
உடல்களல்ல!

மூவரை, குரல் கொடுத்தே
மீட்டுவிட முனைகையில்..
உயிர் கொடுத்து நீ மீட்க
முனைந்தாயோ?

தீயை
தீ தின்றதே...

தூக்கு மீண்டு வரும்
நம் சகோதரர்களுக்கு
பூங்கொத்துக்களை
பரிசளிக்க இருந்தோமே..
ஓர் புரட்சி பூவின்
சாம்பலை அள்ளிக் கொடுக்கும்
அவலத்தை
என்சொல்ல?

மரணம் வென்று வரும்
தோழர்களுக்கு..
உன் மரணத்தையா
வரவேற்பாய் வாசிப்பது?

ஆயிரம் மரணத்தை
அனுபவித்த கொடுமை
அவர்களுக்கு
உண்டாகுமே தோழி..

அவர்கள் சுவாசிக்கும்
விடுதலைக் காற்றில்
உன் மரண நெடி.. ஆயுள் முழுக்க
தங்குமே..
எப்படி மீள்வார்கள்
இந்த தண்டனையில்?

தமிழனின்
உடலில் காய்ந்து கிடக்கும்
பாக்கியம்
வயிறுக்கு மட்டும்தான்.
கண்களுக்கு இல்லை!

விழித்துக் கொள் தமிழா!
இதோடு முடியட்டும் யாவும்.
தீயிற்கு தீயதை மட்டும்
தின்ன கொடுப்போம்!
தீபங்களையல்ல!